Sunday, May 24, 2015

ஆபிரஹாம் லிங்கன்

ஆபிரஹாம் லிங்கன்
முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் ஆபிரஹாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், “உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்” என்றார் பாதிரியார்.
எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரஹாம் லிங்கன் மட்டும் பேசாமல் நின்றார். “ஆபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், “நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்” என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம்.
“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.
1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, “தோல்விகளின் செல்லக் குழந்தை” என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார். இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேற, லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்தும், அவசரமாக தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல் வேட்பாளராக களம் இறங்கி, படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் பெரும் கடனாளியாக மாறியிருந்தார்.
சோர்ந்து போயிருந்த லிங்கனை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாராபுஷ். ‘ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்’. “நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!” என்றார் சாரா புஷ். பாதிரியார் சொன்ன அதே வார்த்தைகள்!
இப்போது லிங்கனுக்குத் தன் இலக்குப் புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு, 1834ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப்பினர், உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத்தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்!.
இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்! 1835ல் அவரின் காதலி ‘ஆனி’ விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் மேரியுடன் திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகள் சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு எதிர்கொண்டதால் தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது.
அமெரிக்க ஜனாதிபதி ஆனதும், அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும் அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறியனால் சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன்.
மணவாழ்க்கை பற்றி லிங்கன் கூறியது - மணவாழ்க்கை லிங்கனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது “மண வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல; போர்க்களம்” என்று குறிப்பிட்டார்.
“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்” என்பது ஆபிரஹாம் லிங்கனுக்கு மட்டுமல்ல…
நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற ஒவ்வொருவருக்கும் அது வெற்றி திருமந்திரம்.

அடுத்தவர்களிடம் இதை பேசாதீங்க...

வீட்டுக்கு வரும் உறவினர்களையும், விருந்தினர்  களையும் வரவேற்று, உபசரித்து பேசுவதில்கூட நிறைய கவனம் தேவைப்படுகிறது. அவர்களிடம் எதை பேசுவது என்பதைவிட, எதை பேசக்கூடாது என்பது ரொம்பவும் கவனிக்கத்தக்க விஷயம். 

உறவினர்களிடம் பேசக்கூடாத விஷயங்கள் பற்றி நாம் இங்கே பேசுவோம்! 

பெண்ணின் திருமணம்:

திருமண பருவத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலான வீடுகளில் இருக்கிறார்கள். பெண்ணின் திருமணம் பற்றி அவர் களது பெற்றோரிடம் பக்குவமாக பேசவேண்டும். 

 – உங்கள் பெண்ணிற்கு திருமணம் எப்போது? 

– ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை? 

– இன்னும் எவ்வளவு நாள் உங்கப் பெண்ணை வீட்டில் வைத்திருக்கப் போகிறீர்கள்? 

.. என்றெல்லாம் கேட்பது அவர்களது மனதை நோகடித்துவிடும்.

அது பற்றி விசாரிக்க நேர்ந்தால் அல்லது அது பற்றி அவர்களே உங்களிடம் கூறினால், ‘ எனக்குத் தெரிந்த நல்ல வரன் இருந்தால் நானும் சொல்கிறேன். அதை பற்றி கவலைப்படாதீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்’ என்று அவர்களுக்கு ஆறுதலாக பேசுங்கள். ஏனெனில் திருமணமாகாத பெண்ணை வீட்டில் வைத்திருப்பவர்கள் ஏற்கனவே மனக்கஷ்டத்தில்தான் இருப்பார்கள். மகளுக்கு வயது அதிகரித்துக்கொண்டே போகிறதே என்ற கவலை அவர்கள் மனதை உறுத்திக் கொண்டிருக்கும்போது, நீங்கள் அக்கறையாக கேட்கும் கேள்வி அவர்   களுக்கு வேதனை தரக்கூடியதாக மாறிவிடக்கூடாது. 

குழந்தை:


திருமணம் முடிந்தவுடன் அடுத்து எல்லோரும் கேட்கும் கேள்வி, ‘ஏதாவது விசேஷம் உண்டா?’ என்பதுதான். சில  தம்பதிகளுக்கு ஏதேனும் பிரச்சினை இருக்கலாம். சிலருக்கு வேறு ஏதாவது எதிர்கால திட்டம் இருக்கலாம். இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் நீங்கள் ஏதாவது கேள்வி கேட்டு வைத்தால் அதற்கு பதில் சொல்ல அவர்களுக்கு சங்கடமாக இருக்குமல்லவா?

குடும்ப வருமானம்:

ஒருவர் மீது நாம் அதிக அக்கறை செலுத்துகிறோம் என்ற உரிமையில் அவரிடம் வருமானத்தைப் பற்றி கேட்பது தவறு. குடும்பத்தில் யார் யார் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்? அவர்   களது மொத்த வருமானம் எவ்வளவு? என்பன போன்ற கேள்விகளைக் கேட்கக்கூடாது. அவர்கள் வருமானத்தை தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனை எப்போதும் இருக்கவேண்டும். ஏன்என்றால் இந்த சம்பள விஷயத்தை கேட்டுவிட்டு சும்மா இருக்கமாட்டோம். ஒன்று ‘இவ்வளவுதானா?’ என்போம். இல்லாவிட்டால் ‘அவ்வளவு சம்பளமா?’ என்று ஆச்சரியப்படுவோம்.  இந்த இரண்டு பதிலுமே சம்பந்தப்பட்டவர்களை எரிச்சலடையச் செய்யும். 

உத்தியோகம்:

எல்லா வீடுகளிலும் எதிர்பார்த்த வேலை கிடைக்காத இளைஞர்களோ, இளம்பெண்களோ இருந்துகொண்டிருப்பார்கள். அந்த கவலை, குடும்பம் முழுக்கவே இருந்துகொண்டிருக்கும். சிலர் அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல், ‘உங்கள் மகன் எங்கே வேலை செய்கிறான்?’ என்று ஆரம்பிப்பார்கள்.

‘அவனுக்கு இதுவரை வேலை கிடைக்கவில்லை’ என்று பெற்றோர் சொன்னால் ‘ஏன் கிடைக்கவில்லை? அவன் நல்ல மதிப்பெண் பெறவில்லையா? மகனுக்கு வேலையில்லாவிட்டால் உங்கள் குடும்பம் கஷ்டப்படுமே?’ என்றெல்லாம் கேள்விமேல் கேள்வி கேட்டு அவர்களை வெறுப்பேற்றிவிடுவார்கள். 

அந்தரங்கம்:

ஒருவருடைய அந்தரங்க வாழ்க்கை என்பது ரகசியமானது. நீங்கள் அவருக்கு மிக நெருக்கமானவர் என்பதை காட்டிக்கொள்ள அவரது அந்தரங்க வாழ்க்கையை பற்றி கேள்விகேட்பது நியாயமில்லை. அவர் திருமணத்திற்கு முன்பு யாரையாவது காதலித்து தோற்றிருக்கலாம். அதை அவரது புது மனைவி முன்னால்  வைத்து பேசுவதும் சரியானதல்ல. அதுபோல் சிலர், குழந்தைகள் முன்னால்வைத்து அவர்களது தந்தையின் கடந்த கால காதல் விஷயங்களை சுவாரஸ்யமாக பேசுவார்கள். அதுவும் யாருக்கும் பிடிக்காத பேச்சாகும். 

கடந்தகால வாழ்க்கை:

கடந்தகால போராட்டங்களை மறந்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பவரிடம் திரும்பத் திரும்ப அவைகளை நினைவுபடுத்தும் விதத்தில் விசாரிப்பது, கேள்விகள் கேட்பது தவறு. உன்னுடைய முதல் கணவர் என்ன செய்கிறார்? உன்னைப் போல ஒரு பெண்ணோடு வாழ அவருக்கு கொடுத்து வைக்கவில்லை என்பது போன்ற ஆதங்கம், அங்கலாய்ப்பை எந்த பெண்ணும் ரசிப்பதில்லை. எல்லோர் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதைப் பற்றிய விசாரணை நமக்கெதற்கு என்று ஒதுங்கியிருப்பதே நல்லது.

‘நீ விவாகரத்து பண்ணிட்டியே உன் முதல் மனைவி, அவளை நான் நேத்து பார்த்தேன். பாவம் ரொம்ப நொந்துப் போயிருக்கா. எல்லாம் அவ தலையெழுத்து’ என்று இரண்டாவது மனைவி முன்னால் வைத்து அவளது கணவரிடம் நொந்துகொள்வதும் தவறு. அப்படி பேசும்போது இரண்டாவது மனைவிக்கு அச்சம் ஏற்படும். ‘இந்த ஆளே நம் கணவரை முதல் மனைவியிடம் கொண்டுபோய் மீண்டும் இணைத்துவிடுவார் போல் தெரிகிறதே!’ என்று நினைத்துவிடுவாள்.

இரண்டாம் திருமணம் செய்துகொண்ட உறவினரோ, நண்பரோ யாராக இருந்தாலும் அவர்களிடம் எதை பேசவேண்டும் என்று ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லையோடு பேச்சை நிறுத்திக்
கொள்ளவேண்டும்.

மருமகளின் தாய் வீடு:

புகுந்த வீட்டினர் தன்னுடைய பிறந்த வீட்டை மதிக்க வேண்டும் என்று எல்லா பெண்களும் விரும்புவார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் அந்த வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். 

மருமகளின் பிறந்த வீட்டைப் பற்றி வருவோர் போவோரிடம் தேவையற்ற விஷயங்களை பேசும் மாமியார்களால் குடும்பத்தின் நிம்மதி குலையும். அதுபோல் தன் வீட்டில் போய் மாமியாரை குறைசொல்வதையும் பெண்கள் தவிர்க்கவேண்டும். எதை பேசக்கூடாது என்பதில் மாமியாரும், மருமகளும் கவனமாக இருந்தால்தான் அந்த குடும்பத்து நிம்மதியை காப்பாற்ற முடியும்.

பாகப் பிரிவினை:

எல்லா குடும்பங்களிலும் பாகப்பிரிவினை நடக்கும். அதில் ஒரு சிலர் பிரச்சினை வேண்டாம் என்பதற்காக விட்டுக்கொடுத்து நடந்து கொள்வார்கள். அது அவர்கள் இஷ்டம் என்று விட்டுவிடவேண்டும். தேவையில்லாமல் அதுபற்றி பேசி, குட்டையைக் குழப்பும் செயலில் ஈடுபடக்கூடாது. சொத்து விவகாரம் ஒரு குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட விஷயம். அதில் அடுத்தவர்கள் தலையிடுவது அவசியமில்லாதது. எவ்வளவு நெருங்கிய உறவினராக இருந்தாலும் நம்முடைய எல்லை எதுவரை என்பதை புரிந்துகொண்டு நடக்க வேண்டும். அவர்களாக தொடர்புகொண்டு ஆலோசனை கேட்டால் மட்டுமே அதுபற்றி பேசவேண்டும். 

சோகமான நிகழ்வுகள்:

எல்லோரும் ஒன்று கூடி மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் ஏதேனும் சோகமான நிகழ்ச்சியைப் பற்றி பேசி எல்லோரையும் கலங்கடிப்பது ஒரு சிலருக்கு கைவந்த கலை. உள்நோக்கம் எதுவும் இல்லாவிட்டாலும் பேசத் தெரியாமல் பேசி வம்பை விலைக்கு வாங்கக்கூடாது. என்றோ நடந்த சோகத்தை மீண்டும் மீண்டும் கிளறவேண்டியதில்லை. அதை வேகமாக மறக்க, நம்மால் முடிந்தால் உதவவேண்டும். இல்லையேல் சும்மா 
இருந்துவிடவேண்டும்.

உடல் நிலை:


ஒருவருடைய உடல் நிலையை பற்றி தொடர்ந்து அவரிடம் பேசி நோகடிக்கக்கூடாது. அதுபோல் பலர் முன்னிலையில் வைத்து நோய் பற்றி விசாரிப்பதும் தவிர்க்கப்படவேண்டும். தான் நோயாளி என்பதை எல்லோரும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஏன்என்றால் ஒருவர் நோயாளி என்றால் அவரது குடும்பத்தினரும், அவரது டாக்டரும் அதை பற்றி அறிந்தால்போதும். ஊரில் உள்ள அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை. 

பேசுவதற்குதான் வாய். ஆனால் என்ன பேசுவது, எந்த இடத்தில் எப்படி பேசுவது, யாரிடம் எப்படி எதை பேசுவது என்ற எல்லைகளை வகுத்துக் கொள்ளவேண்டும். விருந்தோம்பலில் இதுவும் ஒரு முக்கிய அங்கம் என்பதை மறந்துவிடக்கூடாது.