சித்திர சேனன்
காளான், இது மிகச்சிறந்த ஊட்டச்சத்துள்ள சைவ உணவாகும். இந்தக் காளான்களில் இயற்கையாக விளையக் கூடிய காளான்கள் பல உண்டு என்றாலும் இதில் ஒரு சில காளான்களை மட்டுமே உணவாக உண்ண முடியும். ஆனால் செயற்கையாக விளைவிக்கக் கூடிய காளான்கள் அனைத்தையும் உணவாக உட்கொள்ளலாம். செயற்கையாக விளைவிக்கக் கூடிய காளான்களில் சிப்பிக் காளானும், பால் காளானும் அதிகம் விரும்பி உண்ணக் கூடிய உணவாகும்.
தமிழ் நாட்டில் பல இடங்களில் காளான் வளர்ப்புப் பற்றி பயிற்சி வகுப்புகளை நிகழ்த்தி வருகிறார் அருள்தாமஸ் என்பவர். இவர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காளையார் கோவில் என்ற இடத்தில் “ காளான் வளர்ப்பு மற்றும் விதை தயாரிப்பு ஆய்வுக் கூடம்” என்று ஒரு கூடத்தை நிறுவி செயல்பட்டு வருகிறார்.
இக்கூடத்தில் காளான் விதைகளைத் தயாரிக்கிறார். தவிர இம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு காளான் வளர்ப்பு பற்றி ஒருநாள் பயிற்சி வகுப்பு எடுக்கிறார். இதுவரை இவர் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், சென்னை (தாம்பரம், கோயம்பேடு, கிண்டி, செங்குன்றம், புழல்) திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, தேனி, வத்தலக்குண்டு, திண்டுக்கல் எனப் பல பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், பிற குழுக்களுக்கு காளான் வளர்ப்பு பற்றி பயிற்சி அளித்த தோடு அவர்களுக்கு வங்கிக் கடன் வழங்குவதற்கான உதவியும் செய்து வருகிறார்.
காளான் வளர்ப்பு பயிற்சியும், கடனும்:
காளான் வளர்ப்பு பயிற்சியானது ஒரு நாள் பயிற்சி வகுப்பாகும், காலை வகுப்பில் கலந்து கொண்டால் மாலையில் வகுப்பு முடித்துவிடும். மாலையில் பயிற்சி பெற்றதிற்கான சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்தச் சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு இத்தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் வாங்க இந்தச் சான்றிதழ் அடிப்படைத் தகுதி பெற்ற ஒன்றாகும்.
காளான் வளர்க்க வங்கியில் கொடுக்கப்படும் கடன் 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை ஆகும்.
ஒரு லட்சம் கடன் வாங்கினால் நாம் வங்கியில் சொத்து மதிப்பு காட்டத் தேவை இல்லை. ஒரு லட்சத்திற்கு மேல் கடன் வாங்கினால் சொத்துக் கணக்கு காட்ட வேண்டும்.
இன்று அனைத்து வங்கிகளிலும் காளான் வளர்ப்பிற்கான கடன் உதவி வழங்கப்படுகிறது.
1 லட்சத்தை 2 வருடத்திற்குள் கட்டி விட வேண்டும் என்பது விதி.
காளான் வளர்ப்பு பற்றி செய்முறை:
காளன் வளர்ப்பதற்குத் தேவையான மூலப் பொருள்களாவன,
வைக்கோல்
காளான் விதை
பிளாஸ்டிக்
செய்முறை:
நன்கு காய்ந்த வைக்கோலைச் சிறு சிறு துண்டுகளாக வைக்கோல் (கட்டிங்) நறுக்கும் இயந்திரத்தின் மூலம் வெட்டிக் கொள்ள வேண்டும். இதனை நன்கு கொதிநீரில் வைத்து அவிக்க வேண்டும். இது முதல் முறையாகும்.
அடுத்ததாக 100 லிட்டர் நீரும் 150 மில்லி லிட்டர் பார்மலினும், 3 கிராம் கார்பன்- டை- ஜம் பொடி இம்மூன்றையும் கலந்த நீரில் வைக்கோலைச் சுமார் 8 மணி நேரம் ஊறவைத்து, இதன் பின்னர் தண்ணீரை வடிகட்டி உலர வைத்து, ஓரளவு ஈரப்பதம் (அதாவது 60%) கையில் பிடிக்கும் போது ஈர உணர்வு இருக்கும் படி வேண்டும். பின்பு 12-24 என்ற அளவுள்ள பாலித்தின் பையில் வைக்கோலை முதலில் 5 செ.மீ. அளவு இட்டு நிரப்ப வேண்டும். பின்பு காளான் விதையை 20 கிராம் எடுத்து நிரப்பப்பட்ட வைக்கோல் மேல் தூவ வேண்டும்.
இது போல் மாறி, மாறி 7 முதல் 8 அடுக்கு போட வேண்டும். பின்பு பக்கவாட்டில் 3 துளைகள் வீதம் நான்கு பக்கத்திலும் 12 துளைகள் போட வேண்டும். இதன் பின் காளான் வளர்ப்புக் கென்று தென்னை ஓலையால் பின்னப்பட்ட குடிலின் மையத்தில் கட்டித் தொங்க வைத்து தினமும் தண்ணீரைத் தரைப் பகுதியில் உள்ள மணலில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளித்து வந்த 10வது நாளில் காளான் விதைகள், வெள்ளை நிறமாக துளிர் விடுவதைக் காணலாம். பின்பு 27-ஆம் நாளில் காளான் மொட்டுக்கள் இதிலிருந்து தோன்றும். இதை 3 நாட்களில் அறுவடை செய்து விற்பனை செய்ய வேண்டும்.
காளான் விற்பனை:
1 கிலோ காளான் உற்பத்திச் செலவு அதிகபட்சம் 30 ரூபாய் ஆகும்.
1 கிலோ காளான் மொத்த விற்பனைக்கு ரூ.90 முதல் 100 வரை விற்பனை செய்யலாம்.
நேரடியாக நாமே விற்பனை செய்ய ஆகும் செலவு 120 முதல் 150 வரை . 1 கிலோ காளான் இன்று இந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
காளானில் உள்ள சத்துக்கள்:
காளானில் அதிக புரோட்டீன் சத்து உள்ளது. எந்தத் தாவரத்திலும் இல்லாத சத்து இதில் உள்ளது.
தாவர வகைகளிலேயே அதிக புரோட்டீன் சத்து உள்ள ஒரே வகைத் தாவரம் காளான் ஆகும். இதனால் தான் இதன் விலையும் அதிகம்.
காளான் உணவின் மகத்துவங்கள்:
உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும்
நீரழிவு, புற்றுநோய்க்குத் தடுப்பாய் செயல்படும்.
சர்க்கரை நோய்க்குத் தடுப்பாய்ச் செயல்படும்.
இதய நோய்க்குத் தடுப்பாய்ச் செயல்படும்.
ஒட்டு மொத்த நோய் எதிப்புத் தன்மையை உடலுக்குத் தரும்.
இவ்வாறு காளான் வளர்ப்பில் பல நன்மைகளைக் கூறிய அருள்தாமஸ் என்பவர் “ரோபஸ்ட்” என்ற பெயரில் காளான் வளர்ப்பு மற்றும் விதை தயாரிப்பு ஆய்வுக் கூடத்தை நிறுவி, இயங்கி வருவதின் நோக்கம் என்னவெனில்…
ஆரோக்கியமான உணவு மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குதல்.
தமிழக உணவுத் தயாரிப்பு தமிழருக்கு மட்டுமின்றி உலகிற்கும்.
விவசாயத் தொழிலை லாபகரமாக்குதல்.
கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு வாழ்வாதாரம் உருவாக்குதல்.
இவரின் அறிமுகத்தில் காளான் உணவு வகைகள்:
காளான் சூப் தயாரிப்பு.
காளான் டின் (உடனே உண்பதற்கேற்ற தயாரிப்பு)
காளான் மசாலா (குழம்பிற்கு)
காளான் கிரேவி
காளான் பிரட், காளான் பிஸ்கெட், காளான் ஊறுகாய்
காளான் கட்லெட், காளான் பக்கோடா
அதிக புரோட்டீன் உள்ள காளான் பானம்
காளான் பிரியாணி
– போன்ற உணவுகளாகும். இந்த உணவுகளை இவர் தயார் செய்து வைத்துள்ளார். இதை தமிழக அரசு உணவு ஆய்வுக்குழுவினருக்கு அனுப்பி அவர்களின் அனுமதி பெற்றபின் இந்த உணவுப் பொருட்கள் எல்லாம் விற்பனைக்கு வரும் என அருள் தாமஸ் தெரிவித்தார்.
இவர் நடத்தி வரும் நிறுவனம் பற்றி மேலும் இவர் கூறியதாவது, எங்கள் நிறுவனமும், சிவகங்கை மாவட்ட வேளாண்மை அமைப்பும் இணைந்து மாவட்டம் முழுவதும் காளான் வளர்ப்பு பற்றிப் பயிற்சி கொடுத்து வருகிறது. அதில் சிறந்த பயிற்சி பெற்ற நபருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, காளான் வளர்ப்புக்கான கடனை வங்கி மூலம் பெற்றுத் தந்து கொண்டிருக்கிறோம். இதுவரை எங்கள் நிறுவனம் மூலம் 30 லட்சம் ரூபாய் வாங்கி பயனாளர்களுக்கு அளித்திருக்கிறோம்.
காளான் வளர்க்கும் விவசாய மக்களுக்கு காளான் விதை, மற்றும் வளர்க்கத் தேவையான அனைத்துப் மூலப்பொருட்களையும் கொடுத்து உதவுகிறோம். இவர்கள் உற்பத்தி செய்த மொத்த காளான்களையும் எங்கள் நிறுவனம் வாங்கிக் கொண்டு அதற்குறிய பணத்தை, விற்பவரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொண்டு வருகிறது. தவிர அனைத்து மாவட்ட மகளிர் குழுக்களுக்கும், தனிப்பட்ட நபர்களுக்கும் எங்கள் நிறுவனம் காளான் வளர்ப்பில் பயிற்சி அளித்து வருகிறது.
அது தவிர கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு குறிப்பாகத் தாவரவியல் படிக்கும் மாணவர்களின் ஆய்வுக்கு உதவி செய்து வருகிறோம். காளான் வளர்ப்பு பற்றியும் அறிவுரை வழங்கி வருகிறோம்.
இதைத் தமிழகம் முழுக்க பல மாவட்டங்களில் பயிற்சி அளித்து பலருக்கும் வழிகாட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறேன். இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். நலிந்த கொண்டிருக்கும் விவசாயத்தை லாபமான தொழிலாக மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கியும், அதற்காகத் தீவிரமாக உழைத்தும் வருகிறேன். வெளிநாடுகளில் காளான் ஏற்றுமதி செய்ய மாதம் 1000 கிலோ தேவை இருக்கிறது. அதனை எட்டிவிட வேண்டும் என்ற முனைப்போடும் செயல்பட்டு வருகிறேன்.
இவ்வாறு சிறகு இணைய இதழுக்காக (siragu.com) தம் தொழில் பற்றிப் பேசிய இந்த இளைஞனின் கனவு பலிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறென்ன நமக்கு ஆசை இருக்கப் போகிறது?
மேலும் தொடர்புக்கு – அருள் தாமஸ் – 91- 98411 31674 , 91- 97898 41458
http://siragu.com/


No comments:
Post a Comment